states

img

லக்கிம்பூர் வன்முறை: ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின்

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறையில் ஈடுபட்ட ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. 
உத்தரப் பிரதேச மாநிலம் கெரியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது, பாஜகவினர் நடத்திய வாகன அணிவகுப்பில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, தனது காரை போராட்டக்காரர்கள் மீது ஏற்றி இறக்கியதால், சம்பவ இடத்தில் 4 பேரும், இதனையடுத்து அங்கு போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 4 பேர், அதன் பிறகு ஒருவர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். 
இந்த விவகாரத்தில் பல தரப்பினரின் வற்புறுத்தலைத் தொடர்ந்து ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணைக்காக உத்தரபிரதேச சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் 5000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தயாரித்து லக்கிம்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதில் ஆஷிஷ் மிஸ்ரா வன்முறை நடந்தபோது சம்பவ இடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் இன்று லக்னோ நீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கி உள்ளது. உத்தரபிரதேச சட்டபேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்கு பதிவு இன்று தொடங்கி உள்ள நிலையில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.